May 27, 2011

எம்.ஜி.ஆரும் அவர் உருவாக்கிய இரட்டை இலைச் சின்னமும்



இந்தத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி பெற்ற 1.90 கோடி வோட்டுக்களில், அ.தி.மு.க. மட்டுமே 1.41 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது 38.41 சதவிகிதம். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 51.80. சென்ற 2006 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, அ.தி.மு.க. இம்முறை 12 சதவிகித வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று முன்னணி வகித்திருக்கிறது.
அ.தி.மு.க. தொடர்ந்து தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொண்டே வந்திருப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, எம்.ஜி.ஆர். இன்றைக்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் எம்.ஜி.ஆரும் அவர் உருவாக்கிய இரட்டை இலைச் சின்னமும்தான் வெற்றிச் சின்னங்களாக மக்கள் மனத்தில் பதிந்திருக்கின்றன.
ஆனால், இம்முறை அ.தி.மு.க. பெற்ற வாக்குகளில், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளும் பெருமளவு அடங்கியிருக்கிறது. எதிர்ப்பு வாக்குகளை அப்படியே தமது அணிக்கு அள்ளிக்கொண்டு வந்தது ஜெ.வின் கூட்டணித் திறன்.
எம்.ஜி.ஆர். என்ற மந்திர எழுத்துக்கள் இன்றும் வாக்குகளாக மாறுமா என்று சந்தேகம் எழுப்புபவர்கள் உண்டு. ஏழை எளியவர்கள் மனத்தில் எம்.ஜி.ஆர். ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், பிம்பம் இன்றும் அப்படியே தொடர்கிறது என்பதைத்தான், இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பணத்துக்கோ இலவசங்களுக்கோ தங்களை அடகுவைத்துக்கொள்ள மக்கள் தயாரில்லை. திறமையை சம்பளம் கொடுத்துப் பெற முடியும்; நேர்மையை அப்படிப் பெறமுடியாது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்களுக்குச் சேவை செய்ய, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சுய நலத்தில் உழலுவதை மக்கள் ஏற்பதில்லை. பதவி கொடுக்கிறார்கள்; அந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்பவர்களை, பதவியிலிருந்து நீக்கவும் தயங்குவதில்லை.
நன்றி. கல்கி.மே. 2011.

May 19, 2011

கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெ.ஜெ.வுக்கும் தான்.


ருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்... மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் - எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ''எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!'' - இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது.

இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ''என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்... பார்த்தீங்கள்ல... அதுதான் நடந்திருக்கு!'' என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறு களைப் பகிரங்கமாகச் செய்தார்.

அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை.  மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த 'கோமாளிகள்இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே... தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. 'எனக்கு எதுவும் தெரியாதுஎன்று கருணாநிதியும் சொல்ல முடியாது.

விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக... ஐந்து நாள் கூத்துக்காக... 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, 'விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு.

 ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. 'இதெல்லாம் என் வேலை இல்லைஎன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.

கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க... தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா... 

கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் 'முரசொலியில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், 'என்ன செய்ய... எனக்குக் குடும்பம் இருக்கிறதே!என்றார் கருணாநிதி. 'கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்... புகைப்படங்கள்... விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. 'ஆ.ராசா குற்றமற்றவர்... அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லைஎன்ற கருணாநிதியே... அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். 

காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, 'போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. 

அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, 'கஸ்டடி குற்றவாளியாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.

இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. 'சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!என்று கேட்டால், 'இது வழக்கமானதுதானே!என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க... தரைத் தளத்தில் கருணாநிதி - காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!

இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்... இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம்.

 தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக... தனக்கு 'தமிழினத் தலைவர்என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து... தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, 'மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவாஎன்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.

போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.

இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

'உதவாது இனி தாமதம்என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.

தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.

பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது.

 இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!
நன்றி..ஆனந்தவிகடன்.25.05.2011

May 14, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி.



தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தமிழக மக்கள் அமைதிப் புரட்சிசெய்து திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.

 திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை.

திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும்,

தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும்,
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் 

குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும்
தமிழக மக்கள் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

மொத்தத் தமிழகமும் திமுக,இ.காங்,பா.ம.க. கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட 
நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.



.

May 8, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் 23 பணப் பெட்டிகள் எங்கே டெலிவரி?ஜூ.வி.பகீர் தகவல்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது. ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

 க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரை மங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம்பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப்பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளதாகத் தெரிகிறது.
''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டுசெல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.

2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டிபி ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டிபி ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

டிபி ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது.
டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...

''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக்கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன். முதல் டிரிப்பில், ஏழு பெட்டிகள்; இரண்டாவது டிரிப்பில், நான்கு பெட்டிகள்; மூன்றாவது டிரிப்பில் எட்டு பெட்டிகள்; நான்காவது டிரிப்பில், நான்கு பெட்டிகள் கொண்டுசென்றேன். அந்த நான்காவது டிரிப்பில் மூன்று பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டுசென்றேன்.

ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்க​வில்லை. ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டுபோனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது.

பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல்போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய் வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.

பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக்கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில்வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக்கொண்டார்கள். தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடுபோனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள். காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.   அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தைவைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.

ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இதுகுறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன. இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!

கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.
டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டுவரப்போகிறது!
 நன்றி.ஜூ.வி.11.05.2011