May 8, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் 23 பணப் பெட்டிகள் எங்கே டெலிவரி?ஜூ.வி.பகீர் தகவல்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்கு​மூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது. ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

 க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரை மங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்​கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அதன் அடிப்படியில்தான்,  பண விவகாரம்பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை,  7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின்  குற்றப்பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளதாகத் தெரிகிறது.
''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்​துக்குக் கொண்டுசெல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்கு​மூலங்கள்.

2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டிபி ரியாலிட்டி பல தவணை​களில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டிபி ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

டிபி ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது.
டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...

''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக்கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன். முதல் டிரிப்பில், ஏழு பெட்டிகள்; இரண்டாவது டிரிப்பில், நான்கு பெட்டிகள்; மூன்றாவது டிரிப்பில் எட்டு பெட்டிகள்; நான்காவது டிரிப்பில், நான்கு பெட்டிகள் கொண்டுசென்றேன். அந்த நான்காவது டிரிப்பில் மூன்று பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டுசென்றேன்.

ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்க​வில்லை. ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டுபோனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள்.  ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது.

பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல்போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய் வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.

பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால்,  டிரைவரைப் பிடித்துக்கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில்வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்​கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்​களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்க​வில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக்கொண்டார்கள். தேர்தல் முடிந்த 2009 மே  13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடுபோனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள். காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று  அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.   அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தைவைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று  டிடெக்டிவ் ஏஜென்சி கண்டு​பிடித்தது.

ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது​பற்றியான உருப்படியான தகவல்​கள் இதுவரை கிடைக்க​வில்லை. இதுகுறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்கு​மூலம் வாங்கி இருப்ப​தாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன. இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!

கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.
டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டுவரப்போகிறது!
 நன்றி.ஜூ.வி.11.05.2011

No comments: