Jul 11, 2011

விஜயகாந்த் விளாசல்.கருணாநிதி,ஸ்டாலின் மீது சாட்டையடி.



விஜயகாந்த் தனது கேப்டன் டிவியில், இமெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும்:

கேள்வி: ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்: அப்படியானால் இவருடைய பேரன் டி.வி.யும், அவரது டி.வி.யும் எந்த அளவு என்னை இழிவு படுத்தினார்கள் என்பதை அவர் வாயாலே சொல்லுகிறார். அன்று ஆட்சியில் இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. இன்று வருத்தம் தெரிகிறது. இப்படித்தானே ஒவ்வொருத்தருக்கும் வருத்தம் இருக்கும். இந்த வருத்தத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.


கேள்வி: அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்துள்ளதால், உங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நீங்கள் வேதனையோடு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்: எங்கள் கட்சியின் அவைத்தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் முதல் முறையாக அ.தி.மு.க. அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே எங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம்; கூட்டணி அமைச்சரவையிலும் இடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச போனார்கள்.

எங்களின் ஒரே எண்ணம் கருணாநிதி ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான். இதற்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றோம். மு.க.ஸ்டாலின் திடீர் என்று இப்படி ஒரு கருத்தை சொல்லுவார் என்று நான் நினைக்கவில்லை.


கேள்வி: லோக்பால் மசோதா குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: லோக்பால் மசோதாவை நான் வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில் தவறு இல்லை. பிரதமரை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவது தப்பு இல்லை.

கேள்வி: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தினமும் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். இதற்கு ஒரு விடிவு கிடையாதா?

பதில்: இலங்கை அரசும், இந்திய அரசும் தேவை இல்லாமல் கவுரவம் பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன. மீனை யார் எங்குவேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று இரண்டு அரசும் பேசி முடிவு செய்தால் இந்த பிரச்சினையே ஏற்படாது.


கேள்வி: சமச்சீர் கல்வி பற்றி உங்கள் கருத்து?

பதில்:பணக்கார மாணவர் நகரத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் படிக்கிறார் என்றால் அந்த படிப்பை குடிசையில் வாழும் ஏழை மாணவர்களும் படிக்கவேண்டும். இவ்வாறு சமவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் சமச்சீர் கல்வி. நகரத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள வசதிகளைப்போல கிராமத்தில் உள்ள பள்ளிகளிலும் வசதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் சமவாய்ப்பை முதலில் உருவாக்கினால்தான் அது சமச்சீர் கல்வியாகும்.

கிராமப்பகுதியில் 7 வகுப்புகள் உள்ளது என்றால் 7 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர்தான். 7 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் என்றால் எப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்? பாடத்திட்டத்தை மட்டும் கொடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை கொடுத்துவிட்டேன் என்றால் எப்படி?

கிராமங்களில் இன்றைக்கும் மரத்தடி பள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் எப்படி சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்? என்பது எனது கருத்தாகும்.


கேள்வி: பள்ளி கல்வி கட்டணத்தில் தொடர்ந்து குளறுபடி உள்ளதே? இதற்கு என்ன தீர்வு?

பதில்: வியாபார அடிப்படையில் காசு மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணத்தில் செயல்படும் பள்ளிகளால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் தரமான நல்ல ஆசிரியர்களை வைத்து நல்ல கல்வியை கொடுத்தால் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பு இருக்காது. இவைகளை எல்லாம் இப்போது வந்துள்ள ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் செய்யவேண்டும்.

அதிகமாக கல்வி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி பெற்றோர்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. பொதுமக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்குத்தான் அரசு. அதிக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகளை அரசாங்கமே கண்டறிந்து இப்படிப்பட்ட குறைகளை நீக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

1 comment:

arasan said...

நல்லாத்தான் பேசுறாரு...
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க முயற்சி எடுக்கட்டும் ..சில பதில்கள் சிலருக்கு சுடத்தான் செய்யும் ..
இவரின் வலி அவர்களுக்கும் புரிய வேண்டும் அல்லவா ...