Feb 21, 2012

தந்தையை அடித்தே கொன்ற தாயை விடுதலை செய்த தமிழக காவல் துறை.


மாவட்ட காவல்துறை S.P.அஸ்ரா கர்க்.
மாநில குற்றவியல் சரித்திரத்தில் தமிழக காவல்துறை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் வசித்தவர் வீரண்ணன், உஷா ராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரண்ணன், எப்போதும் மனைவியை அடித்திருக்கிறார். துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத உஷாராணி விவாகரத்து பெற்றார். பின்னர் குழந்தைகளோடு தனியே வாழ்ந்து வந்த உஷாராணியிடம், தான் மனம் திருந்திவிட்டதாக வீரண்ணன் சொல்ல, உஷாராணி மீண்டும் அவனோடு வாழ்ந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, குடிபோதையில் மனைவியை அடித்ததோடு மகள் கோகிலப்பிரியாவிடமும் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறார் வீரண்ணன். தன் உயிரைப் பாதுகாக்கவும், தனது மகளின் மானத்தைக் காப்பாற்றவும் கணவனைத் தடுத்து, கிரிக்கெட் மட்டையால் அடிக்க வீரண்ணன் அதே இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்தை விசாரித்த மதுரை ஊரக எஸ்.பி. அஸ்ரா கர்க், குற்றஞ்சாட்டப்பட்ட உஷா ராணி மற்றும் கோகிலப்பிரியாவையும் விசாரித்துவிட்டு, இந்தியதண்டனைச் சட்டம் பிரிவு 100 -ன் அடிப்படையில், உஷா ராணியைக் கைது செய்யாமல் விடுவித்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 100 என்ன சொல்கிறது?

ஒரு தாக்குதலில் தன்னுடைய உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், தனக்கு தீவிர காயம் ஏற்படும் என்ற அச்சத்திலும், பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், தன்னைக் கடத்தப் போகிறார்கள் என்ற சூழலிலும், தன்னைக் கடத்தி வைத்து, அந்தத் தகவலை வெளியில் சொல்ல முடியாத சூழல் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நடத்தும் தாக்குதலில் மரணம் சம்பவித்தால், அது தற்காத்துக்கொள்ளும் உரிமைஎன்று அந்தச் சட்டம் சொல்கிறது.

திடீரென்று ஒருவர் தாக்கப்படும்போது தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. எதிராளி தாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனக்கு காயமோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படும் என்ற அச்சமோ ஏற்பட்டாலே எதிராளியைத் தாக்கும் உரிமை உண்டு. அவ்வாறு தாக்கும்போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலும், அது ஒருவர் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

குடிபோதையில் உஷா ராணியின் வீட்டுக்கு வந்த வீரண்ணன். மனைவியைத் தாக்க முயற்சித்தபோது, ‘தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்என்ற அச்சம் உஷா ராணிக்கு ஏற்பட்டது இயல்பே. மேலும், வயதுக்கு வந்த தனது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த வீரண்ணன் முயலும்போது தன்னையும் தன் மகளையும் பாதுகாத்துக்கொள்ள உஷா ராணி வேறு என்ன செய்ய முடியும்?
வழக்கமாக காவல்துறையினர் இதுபோன்ற நேர்வுகளில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து, சிறையில் அடைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதே வழக்கம். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்புக்காகத்தான் தாக்கினேன் என்று நிரூபித்த பின்னரே நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்.

இந்த வழக்கு விசாரணை முடிய பல ஆண்டுகள் கழியும். அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் கடுமையான துயரத்துக்கு ஆளாகும். உஷா ராணியின் வழக்கைப் பொறுத்தவரை நடந்த சம்பவத்தின் பின்புலத்தையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்த மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், வழக்கில் சம்பந்தப்பட்டவரை உஷா ராணியைக் கைது செய்யாமல் உடனடியாக விடுவித்துள்ளார். இந்த நடவடிக்கை மனிதாபிமானமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல, சட்டபூர்வமான நடவடிக்கையும் கூட! சபாஷ்.

No comments: