Jul 20, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மிரட்டிய ராஜீவ்.அதிர வைக்கும் தகவல்கள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்கிற, தமிழர் நலனுக்காக செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இராஜீவ் காந்தி மறைத்து வைத்திருந்தது தமிழர்களுக்கு எதிரான கொலைக் கருவியைத்தான்! ‘‘இப்போது இலங்கை இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே; இலங்கை எதிராகத் திரும்பினால் கூட பரவாயில்லை. சீனாவுக்கு ஆதரவாகச் சேர்ந்துவிட்டது’’ என்று ஆற்றமாட்டாமல் அலறி நிற்கிறது இந்தியா.

அதற்கு முக்கியக் காரணம் திரிகோண மலைதான். அந்தத் திரிகோணமலைக்காகத்தான் இராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஜெயவர்த்தனேவுக்கு இராஜீவ் காந்தி எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தில் காணப்பட்ட நோக்கம் என்ன? அதில் அடங்கியுள்ள ரகசியம் என்ன? அந்தக் கடிதத்தில் காணப்படும் செய்திகளை நான் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1. திரிகோணமலை அல்லது வேறு எந்த இலங்கைத் துறைமுகத்தையும் எந்த தேசத்தினுடைய இராணுவத் தளமாக, இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
2. திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிடங்குகளை இந்தியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
3. இலங்கை மற்ற நாடுகளுடன் சேர்ந்து அமைத்துள்ள ஒளிபரப்பு நிலையங்கள்... இலங்கையின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கவேண்டும். இராணுவப் பயன்பாட்டுக்கோ உளவுத்துறைப் பயன்பாட்டுக்கோ அமைக்கக் கூடாது.
4. இந்தியாவில் இருக்கும் இலங்கைக் குடிமக்கள் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவர்களையும், விடுதலை கோருபவர்களையும், பிரிவினைவாதம் பேசுபவர்களையும் இந்தியா நாடு கடத்தும்.
5. அத்தோடு நில்லாமல், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி அளிப்பதோடு தேவைப்பட்ட ஆயுதங்களையும் வழங்கும்.

இராஜீவ் காந்தியின் இரட்டை வேடத்தில் இந்த வேடமும் ஒன்று! இந்த விஷமமான ஒப்பந்தத்தை 1987ம் ஆண்டு தம்பி பிரபாகரன் கண்டித்து அறிக்கை விட்டார். நானும் அதைக் கண்டித்து அறிக்கை விட்டேன். எங்கள் இருவரின் அறிக்கைகளும் 1987 ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி மாலை முரசு இதழில் வெளிவந்தன. தம்பியின் அறிக்கை இரண்டாம் பக்கமும், எனது அறிக்கை மூன்றாம் பக்கமும் வெளிவந்தன.

இந்த அறிக்கைகளை நாங்கள் அனுப்பி வைத்தது ஆகஸ்டு முதல் தேதி. வெளியானதோ மூன்றாம் தேதி. அதற்கிடையில் 2-ம் தேதி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக இராஜீவுக்கு பாராட்டு விழா நாடகம் சென்னையில் நடந்தது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வலுக்கட்டாயமாக அந்த விழாவில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டார்.

அந்த ஒப்பந்தத்தை மனதளவில் புரட்சித் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. புரட்சித் தலைவரைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் பற்றிச் சொன்னபோது, பேச இயலாத நிலையிலும் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே அவர் முதலமைச்சராகத் தொடரலாம். அவர் இயங்க முடியாத நிலையில் இருப்பதால், வேறு யாரேனும் ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்துவிட்டு எம்.ஜி.ஆர். பதவியிலிருந்து விலகிக்கொள்ளட்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.

இது அறிவுரை அல்ல... டெல்லி ஏகாதிபத்தியதின் ஆணை! அந்த மாமனிதர் மரணத்தை நோக்கி வேகவேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த நேரம். என் ஆருயிர் தலைவர் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நேரம். எதையும் செய்ய இயலாத கையறு நிலை.

நினைத்ததை முடிக்கும் என் நேசத் தலைவனுக்கு நேர்ந்த கதியை நினைத்து இன்றும் நான் நெஞ்சு நொறுங்கிவிடுகிறேன். 1987 ஜூலை மாதம் 31- ம் நாள் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட இருந்தவரை... போகக் கூடாது என்று டெல்லி கட்டளை இட்டது.

ஆகஸ்டு இரண்டாம் தேதி பாராட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டுதான் அமெரிக்கா செல்லவேண்டும் என்று. கைகளும் கால்களும் வீங்கிப் போய் பேசவும் திறனற்று இருந்த என் காவிய நாயகனை அமெரிக்கா செல்லாமல் கட்டிப்போட்டார் இராஜீவ் காந்தி.

ஜூலை 31 ம் தேதி தோட்டத்தில் இருந்து மாலை 5 மணி அளவில் விமான நிலையத்துக்கு புறப்பட்டு, செயின்ட் தாமஸ் மவுன்ட் வந்துகொண்டிருந்தவரை, ‘அமெரிக்கா செல்லக் கூடாது’ என்று டெல்லி தடுத்துவிடவே... தோட்டத்துக்கு திரும்பிப் போகிறார்.

நான் ஆகஸ்டு 3-ம் தேதி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக விட்ட அறிக்கைக்கு எதிர் வினையாக... என் அரசவைக் கவிஞர் பதவியைத் தலைவர் மனமில்லாமல் நெருக்கடிக்காக பறிக்க நேர்ந்தது.ஆகஸ்டு நான்காம் தேதியோடு என் அரசவைக் கவிஞர் பதவி முடிந்துபோனது. பதவிக்காக எந்தக் காலத்திலும் நான் என் கொள்கையை, இலட்சியத்தை விட்டுக் கொடுத்ததில்லை.

ஒரு நாற்காலிக்காக ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை கொன்று குவிக்கத் துணை நின்ற துரோகச் சாதியைச் சேர்ந்தவன் அல்ல நான். திரிகோணமலையை மனதிலே வைத்து இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான மட்டும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒருவகையில் ஈழத் தமிழர்களுக்கான அடிமை ஒப்பந்தமாகத்தான் இருந்தது.
புலவர் புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்...

Anonymous said...

பல அறியாத தகவல்கள் .. திரிகோணமலைக்காகத் தான் இந்தியா இலங்கைக்குள் நுழைந்தது என்பது தெரியும் மற்றவை எல்லாம் புதிது .. இப்போ என்னாச்சு இந்தியாவுக்கு திரிகோணமலைக் கிடைக்கவே இல்லை .. அங்கிருந்த தமிழர்களும் சிற்பான்மையினராகிவிட்டனர். அங்கு சிங்களவர்களே அதிகமாக இருப்பதாக தகவல் ..

சத்தியா said...

தன் சுயநலன்களுக்காக எம்மை அழித்தது இந்தியா. அதனால் கிட்டிய நன்மை என்ன? ஒரு சுண்டைக்காய் நாட்டிற்கு அடிமை சேவகம் செய்வதைத்தவிர. இந்தியாவிற்கு திருமலை போச்சு தமிழருக்கு காலாகாலம் வாழ்ந்த தமிழர் நிலமும் பறிபோச்சு. கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு சிங்கள பேரினவாத அரசு சீனாவின் மடியில் வீழ்ந்து புரளுகின்றது. பதிவரின் செய்து புதிதாக உள்ளது. தமிழர் அழிப்பிற்கு துணைபோனதற்கான தண்டனையைத்தான் போபஸ் ஊழல் மன்னனுக்கு கிட்டியது.