Sep 5, 2012

தமிழீழத்திற்கு எதிராகராஜிவ் காந்தி, மு.கருணாநிதி கூட்டுச்சதி அம்பலம்.

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. 

மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். 'மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்​ளார்: 'எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்​தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.''

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், 'மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்'' என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள்.

ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.

No comments: