Jul 31, 2012

முரட்டுபொண்டாட்டியும் சுருட்டுபாயும்.

ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் தனது அரசியல் சொற்பொழிவில், அவ்வப்போது குட்டிக் கதைகள் சொல்வார். பாமர மக்களுக்கு விஷயத்தை எளிதில் புரிய வைக்க, அப்படி அவர் சொன்ன ஒரு குட்டிக் கதை தான் இந்த முரட்டுபொண்டாட்டியும் சுருட்டுபாயும் என்ற கதை இதோ:

காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் எதிர் எதிராக நிற்பதால், இந்தியா வந்த பிரிட்டிஷ் தூதுக் குழுவால், ஒரு பயனும் இல்லாமல் போய் விட்டது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள், மகா முரட்டு சுபாவம் கொண்டவள். கணவன், அவளை பக்கத்தில் கொண்டு வந்து படுக்க வைக்க வேண்டுமானால், கையைப் பிடித்து இழுத்து வந்து தான், உட்கார வைக்க வேண்டும்.

இந்த நிலையில் உள்ள கணவனுக்கு, படுப்பதற்கு ஒரே ஒரு பாய்தான் உண்டு. அதுவும், சுருட்டைப் பாய். அது சுருட்டிக் கொண்டு, உருண்டையாய் சுற்றி வைத்த பாய் போல சுருண்டு இருக்கும். அதை விரிக்க வேண்டுமானால், ஒரு பக்கம் காலால் மிதித்து, இரண்டு கைகளாலும் விரித்துக் கொண்டு போய் உடனே உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், கணவன் என்ன செய்வான்?

பாயை விரிக்க ஆரம்பித்தால், மனைவி எட்டிப் போய் உட்கார்ந்து கொள்கிறாள்; மனைவியை இழுத்து வரப் போனால், பழையபடி பாய் சுருண்டு விடுகிறது. ஆகவே, இரவு முழுவதும், கணவன் பாயை விரிப்பதும், ஓடிப்போய் மனைவியை இழுப்பதும், அதற்குள் பாய் சுருண்டு விடுவதால், அதை விடுவிக்க ஆரம்பித்தவுடன், மனைவி ஓடிப்போவதையும் கண்டு, மீண்டும் அவளை இழுக்கப் போவதுமாக, நடமாடிக் கொண்டிருந்ததால், பொழுது விடிந்ததும், தன் முயற்சி பயனளிக்காது போகவே, அவன் வேலைக்குப் போய் விடுவது வழக்கம்.

அது போலவே காங்கிரசும், முஸ்லிம் லீக்கும், பிரிட்டிஷ் தூதுக் குழுவிற்கு முரட்டுப் பெண்டாட்டியும், சுருட்டுப் பாயுமாக இருந்து உருப்படியான விஷயம் எதுவும் நடைபெற முடியாமல் போனதால், விடிந்ததும் தூதுக்குழுவினர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டனர்.
குடியரசு 27-8-46.

No comments: