Jun 13, 2012

இந்தியாவுக்கும் எதிராக போரிட நேரும் தம்பி பிரபாகரன்.


கொடியவன் ஒருவன், ஒன்றும் அறியாத அப்பாவி ஒருவனை கொலை செய்துவிட்டான்.
கொலைக்கு ஆளானவன் வீட்டில் மனைவி, குழந்தைகளின் ஓலம்; ஒப்பாரி. ஊரே இரங்கல் தெரிவித்தது!
இரங்கல் தெரிவிப்பதால் இறந்தவன் என்ன எழுந்தா வரப்போகிறான்? பாடை கட்ட மூங்கில் வாங்கக் கூட கையில் காசு இல்லை.
கொலை செய்தவனே இழவு வீடு தேடி வந்தான்.

பாவம்... பாடைகட்ட மூங்கில் கூட இல்லை. பச்சோலை இல்லை. கவலைப்படாதே... நானே வாங்கித் தருகிறேன். பாடையை சுமந்து செல்ல நான்கு பேரையும் நானே அனுப்பி வைக்கிறேன்’’ என்றான் அந்தக் கருணாமூர்த்தி. இது கட்டுக் கதை அல்ல...

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய இந்தியா என்கிற புண்ணிய பூமி தமிழ் ஈழ மக்களுக்கு உதவப் போகிறது என்பதைப் பார்க்கும்போதும்; படிக்கும்போதும்;இந்தக் கதையும் காட்சியும்தான் என் கண் முன்னே நிற்கின்றன!இந்தியா என்பது என்னைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன்களை பற்றி சிந்திக்காத தேசம்.
இந்தியாதான் தமிழ் ஈழத்துக்கு மாபெரும் தடைக்கல்லாக இருக்கும் என்பதை தம்பிபிரபாகரன் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் புரிந்து வைத்திருந்தார்.

ஒருநாள் மதுரையில் இருந்து வீட்டுக்கு வந்தவர்,
அண்ணே... நாங்கள் எல்லாம் என்ன இந்த நாட்டின் பார்வையில் கிரிமினல் குற்றவாளிகளா? என்று நான்  சற்றும் எதிர்பாராத வகையில் கண்களில் நெருப்பெரிய கோபமாகவே கேட்டார் தம்பிபிரபாகரன்.
என்ன தம்பி, என்ன சொல்கிறீர்கள்?’’ என்றேன்.

அங்கே (மதுரையில்) நான் அறையில் தங்கியிருக்கும்போது காவல்துறையினர் எப்போதும் என்னை கண்காணித்தபடியே இருக்கிறார்கள். நான் கடிதம் எழுதிக் கொண்டிருந்தால் ஜன்னல் வழியாக அதை கவனிக்கிறார்கள், கண்காணிக்கிறார்கள்.அவர்களே வலியவந்து, ‘சிற்றுண்டி சாப்பிட போகவில்லையா?’ என்று கேட்கிறார்கள்.மதியவேளையில் வந்து, ‘சாப்பிடப் போகவில்லையா?’ என்கிறார்கள். இப்படி காவல்துறை எங்களை தொடர்ந்து கண்காணிப்பது பெரிய அவமானமாக இருக்கிறது.

ஒரு விடுதலைப் போராளியை கிரிமினல் போல இந்தத் தமிழ்நாட்டின் காவல்துறை பார்ப்பதுவெட்கமாக இருக்கிறது. தலைகுனிவாக இருக்கிறது! என்று கனல் கக்கும் கண்களோடு  கொதித்துப்போய் பேசினார் தம்பி பிரபாகரன்.

சரி தம்பி பொறுமையாக இருங்கள். நாம் தலைமைச் செயலகம் போவோம். இதுபற்றி விசாரிப்போம்’’
என்று என் காரில் (அரசு கொடி போட்ட கார்) ஏற்றிக் கொண்டு மேலவைத் துணைத் தலைவருக்கான எனது அறைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.

அப்போதும் புரட்சித் தலைவருக்கும் எனக்கும் ஊடற்பருவம்தான். பெரும்பாலான காலமும் அப்படித்தானே போனது!என் அறையில் இருந்துகொண்டு அப்போது சட்ட அமைச்சராக இருந்த சகோதரர் பொன்னையன் அவர்களை இன்டர்காமில் அழைத்தேன்.அவரும் விரைந்து என் அறைக்கு வந்து சேர்ந்தார்.
தம்பி பிரபாகரன் என்னோடு அங்கு இருப்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

தம்பியைப் பார்த்தார். கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சி.
தம்பியைப் பார்த்து வணக்கம் சொன்னார்.
பதிலுக்கு தம்பியும் வணக்கம் தெரிவித்தார்.
நாங்கள் மூவரும் வெளியே வந்து, ஒரே காரில் அமர்ந்தோம்.
என் இடப்புறத்தில் தம்பி;
வலப்புறத்தில் பொன்னையன்!
எதுவும் விளங்காதது போல் என்னைப் பார்த்தார் பொன்னையன்.

தமிழகக் காவல்துறைக்கு (தமிழ்நாட்டு அரசு) நாம் சம்பளம் தருகிறோமா... இல்லை, ஜெயவர்த்தனே தருகிறானா?’’என்று எடுத்த எடுப்பிலேயே பொன்னையனிடம் கேட்டேன்.
தம்பி கோபமாக இருந்ததும், நான் இப்படிக் கேள்வி கேட்டதும் அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன.

என்னண்ணா சொல்கிறீர்கள்?’ என்றார்.
தம்பியை கிரிமினல் குற்றவாளியைப் போல தமிழ்நாட்டு காவல்துறை பார்க்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது?’ என்றேன்.
தம்பி அனைத்தையும் விவரமாக விளக்கிச் சொன்னார்.


அண்ணா உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. மைய அரசு கண்கொத்திப் பாம்பைப் போல பார்த்துக் கொண்டிருக்கிறது. நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யமுடியும்? என்றார் பொன்னையன்.


இதைக் கேட்டதும் தம்பி சீற ஆரம்பித்துவிட்ட்டார்.
எனக்குத் தெரியும். இந்தியாவும் எங்களுக்கு எதிராகத்தான் இருக்கும். ஒருகால், நாங்கள் இலங்கையை சந்திக்கும் கையோடு இந்தியாவை சந்திக்க வேண்டிய நெருக்கடி இன்று இல்லாவிட்டாலும் நாளை வரலாம்...


சாகத் துணிந்தவன் இலங்கை என்று பார்ப்பானா? இந்தியா என்று பார்ப்பானா? எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆவேசமாகப் பேசினார் தம்பி பிரபாகரன்.
நான் தம்பியின் தோளைத் தட்டிக் கொடுத்து,
தம்பி பொறுமையாக இருங்கள்என்றேன்.என் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை.


பொன்னையன்... நீங்கள் தலைவரிடம் சொல்லுங்கள். நான் அவரிடம் பேசும் நிலையில் இல்லை.  கண்டிப்பாக தலைவரிடம் பேசுங்கள்   என்று சொல்லிவிட்டு அவரை அனுப்பி வைத்தேன்.
இலங்கை போல இந்தியா எங்களுக்கு எதிராகத் திரும்பி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தால்... இந்தியாவுக்கும் நாங்கள் எதிராகத்தான் நிற்போம்! இலங்கை என்ன, இந்தியா என்ன?என்று தம்பி சொன்னதைக் கேட்டபோது, உண்மையிலேயே...தன் சக்திக்கு மீறி பேசுகிறார் நடைமுறைக்கு சாத்தியமற்றதைப் பேசுகிறார். இவர் பேச்சு ஒரு சின்னப் பிள்ளையின் பேச்சாக இருக்கிறதுஎன்றுதான் நான் எடுத்துக் கொண்டேன்.

உண்மையில் அந்தக் கணத்தில் அவரை குறைத்துதான் மதிப்பிட்டேன். இந்த சிறிய அக்கினிக்குஞ்சு 87-ல் இந்தியாவுக்கு அடிபணிய மறுத்து எரிமலையாக வெடிக்கும் என்று அறிந்துகொள்ளும் ஞானம் எனக்குத்தான் இருக்கவில்லை.

1987-ம் ஆண்டு இந்திய அழிவுப்படை ஈழம் போனபோது அதற்கு எதிராக அந்த மாவீரன் விண்ணுயர எழுந்து நின்றபோதுதான், அவனது உண்மையான அடையாளம் எனக்குத் தெரிந்தது.
நன்றி:புலமைப்பித்தன்.புரட்சித்தலைவர்-தம்பி-நான்.தொடரில்.