Aug 21, 2012

நடிகவேள். எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

M.R.RADHA
”யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியோடு நான் ஒரு சமயம் திருப்பதிக்குப் போயிருந்தேன். சுவாமி தரிசனத்துக்காக எல்லாருமாகச் சேர்ந்து மலைக்குப் போயிருந்தோம். அங்கே வைச்சிருந்த சந்தனக் கலவையின் வாசனை என் மூக்கைத் துளைத்தது. ‘இவ்வளவு வாசனை வீச இதிலே என்னவெல்லாம் சேர்த்திருப்பாங்களோ?’ன்னு நினைச்சேன்.

அவங்களாக் கொடுத்தா தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க?ன்னு தோணுச்சி. அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தா தேவலைன்னு பட்டுது. அக்கம் பக்கம் பார்த்து, யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன்,

என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சிவிட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர், ‘இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்; இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கனும். எல்லாக் கதவையும் சாத்துங்க!’ன்னி கத்த ஆரம்பிச்சிட்டார். ‘இது என்ன வம்பு?ன்னு நான் மெல்ல நழுவினேன்.

அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒண்ணொண்ணா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க. ’அகப்படுக்கிட்டா அவ்வளவுதான்’னு, ‘தப்பினோம், பிழைச்சொம்’னு தலைதெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்...”

”சந்தனம்...?”

”விடுவேனா அது என் மடியிலேயே இருந்தது. ‘ஸ்ரீ பாதசாகரம்’னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம். பச்சை கற்பூரம். அத்தர், அது இதுன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க. சுவாமி தரிசனம் செய்யறச்சே இந்தப் பக்தருங்க ’கோவிந்தா, கோவிந்தா!ன்னு ஓயாம, ஒழியாமச் சத்தம் போடறாங்க, இல்லையா? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம்.

 அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாக்களாம். வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலங்களாக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்...”

”திருப்பதி ‘ரேட்டிலே பார்த்தால் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்துவிட்ட சந்தனமே ஜந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே?’’

”யார் கண்டது போனாலும் போயிருக்கும் அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா? ‘சந்தனத் திருடன் நானாத்தான் இருக்கும்’கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து ‘ஏண்டா,  இப்படிக் கூடச் செய்யலாமா?ன்னார்.

‘நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது’ன்னு நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி. ‘எப்படி இருக்கு?ன்னு கேட்டேன். அது அவர் சூட்டைத் தணிக்கலேன்னாலும் என் சூட்டைக் கொஞ்சம் நாள் தணிச்சி வந்தது.

எல்லாம் தீர்ந்து அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன். ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவேயில்லே!”

”சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும்  மனசை விட்டுப் போகவில்லை.

Aug 13, 2012

கவிஞர் வாலியின் நாடகத்தில் காஞ்சி ஜெயேந்திரர்


நான் நாற்பதுகளிலேயே, சின்னச் சின்னதாய் நாடகங்கள் எழுதத் தொடங்கி திருச்சி தேவர் ஹாலில் அரங்கேற்றுவதுண்டு. அமரர் திரு.ரத்தினவேலுத் தேவரின், அருமைப் புதல்வன் திரு.கணேசன் என் ஆருயிர்த் தோழன்.


அப்படியிருந்தும் நாடகம் போட, சில நேரங்களில் தேவர் ஹால் கிடைக்காமல் போகும்.‘City Club’-ல்சீட்டாடிக்கொண்டிருக்கும் அன்பில் தர்மலிங்கத்திடம் போய் நிற்பேன்; அடுத்த விநாடி ஹால் கிடைத்துவிடும்!

திருவானைக்காவலில் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியின் பராமரிப்பில் உள்ளது.அங்கு காலேஜ் குமாரிஎன்று ஒரு நாடகம் நான் எழுத பள்ளி மாணவர்களை வைத்துப்போட்டேன்.


இதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க, இரு பையன்கள் வருவார்கள். இருவரும் வயது இருபதை நெருங்கிக்கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் கூட இருக்கலாம்.

குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.


இன்னொரு இளைஞன் நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன். அந்த இளைஞன் பக்கத்தில் உள்ள T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டிருப்பவன்.


 பாய்ஸ் கம்பெனியில் ஏற்கனெவே இருந்துபழக்கப்பட்டவன்.அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!
இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டு நான் ‘INNOVA’ காரில் திருச்சி வந்து சேர்ந்தேன்!


நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த பாடசாலை மாணவர் தான் காஞ்சி மடாதிபதி திரு.ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
 
நாடகத்தை வேடிக்கை பார்த்த – T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணிபுரிந்த பையன் பேர் திரு.கணேசமூர்த்தி. சிவாஜி கணேசன் என்று சொன்னால் புரியும்! நன்றி
 கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)