Dec 31, 2010

2011. புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க! வளமுடன்!

                       அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
                                                           அன்புடன்..
                                                                    

Dec 24, 2010

ஒரே வள்ளல் எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து .


எம்.ஜி.ஆருக்கே மரணமா?

எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

காற்று - சமுத்திரம் - வானம் - எம்.ஜி.ஆர்

இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?
.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

என்னால் அழ முடியவில்லை.அழுகை வரவில்லை.

மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

"நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?"என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது - ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் .......

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்"பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

"மன்னனல்ல மார்த்தாண்டன"என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த "நாடோடி மன்னனில்" தொடக்கப் பாடலாக "செந்தமிழே வணக்கம்" என்று தான் ஆரம்பித்தீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க'டொக்'என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு "யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்" என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது "ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா"? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

 பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.

உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;

நன்றி : வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலிலிருந்து.

Dec 17, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் பினாமி சாதிக். பரபரப்பு தகவல்கள்

ஆ.ராசா.சாதிக்.

 இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் விவகாரமாக கருதப்படும், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அரசியல் தரகர் நிரா ராடியா ஆகியோருக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படுவது, "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனத்தின் எம்.டி., சாதிக் தான். அவரது பெயரில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களும், நிறுவனங்களும் உள்ளன. தற்போது 500 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் சாதிக். கரூர் மாவட்ட பள்ளபட்டியில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்துக்கு தன் சகோதரர்களுடன் பிழைப்பு தேடி வந்துள்ளார் சாதிக். பெரம்பலூர் வந்த சாதிக், முதலில், கிடைத்த வேலைகளை செய்து வந்தார். அதன்பின், சைக்கிளில் ஊர், ஊராக சென்று தவணை முறையில் துணி வியாபாரம் செய்து வந்தார். அந்த வியாபாரத்தில் கண்ட வளர்ச்சியின் மூலம், எலக்ட்ரானிக் பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழிலுக்கு மாறினார்; தொடர்ந்து, வீட்டு புரோக்கராக மாறினார்.

கடந்த 1995ம் ஆண்டு தான், முன்னாள் அமைச்சரும், தாட்கோ சேர்மனுமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் வரகூர் அருணாச்சலத்தின் நட்பு சாதிக்குக்கு கிடைத்துள்ளது. அவரிடம் சாதிக் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், வக்கீலாக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா அடிக்கடி வரகூர் அருணாச்சலத்தை சந்தித்துள்ளார். அப்போது சாதிக்கை, ராஜாவுக்கு, வரகூர் அருணாச்சலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் சாதிக், சிறிய அளவில் நிலம் வாங்கித்தரும் புரோக்கராக இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1999ம் ஆண்டு ராஜா எம்.பி., ஆனவுடன் மிகவும் நெருக்கமான சாதிக், தன்னுடைய பெயரில் ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்ய அலுவலகங்களை மாநிலம் முழுவதும் துவக்கியுள்ளார். அதன்மூலம் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், சிறிய அளவில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.


அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், 2004ம் ஆண்டு ராஜா மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது தான் சாதிக், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளார். அந்த நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் மட்டுமே துவக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எம்.டி.,யாக சாதிக்கும், ராஜாவின் குடும்பத்தினர் சிலர் இயக்குனர்களாகவும் இருக்கின்றனர். "கிரீன்ஹவுஸ்' நிறுவனம் துவங்கிய ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்ததாக கணக்கு காட்டியுள்ளது. கடந்த 2007-08ம் ஆண்டுகளில், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் தான், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடும் நடந்துள்ளது. தற்போது ராஜாவின் பினாமியாக இருக்கும் சாதிக்கின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சமீபத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் தெரியவந்துள்ளது.

பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூருக்கு பிழைப்பு தேடிவந்த ஒருவர், 20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளது, தமிழக மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:தினமலர்

======================================================================
எக்ஸ்ட்ரா பிட்டிங்:
*************************

பெருமாளுக்கு மட்டுமா பூ? பொதுமக்களான தமிழர்களுக்கும் தான்.
வாழ்க! பெரியாரின் சுயமரியாதை!..

Dec 15, 2010

தங்கள் நினைவை போற்றி வணங்குகிறோம்.

தோற்றம்.15.12.1934. S.வெங்கடாஜலம்.   மறைவு.01.03.2006

இந்துமதி நாகராஜன்.(மகள்)
15.12.2010

Dec 12, 2010

இயற்கையின் அதிசயமா? (அ) மனிதனின் திறமையா?

இன்று எனது நண்பர் D.வெங்கி மெயிலில் அனுப்பிய வியப்பூட்டும் ஆச்சரியமான புகைப்படங்கள்.இவற்றை பார்த்தபோது வியப்பும்,ஆச்சரியமும் ஏற்பட்டது. இயற்கையின் அதிசயமா? அல்லது மனிதனின் திறமையா? படங்களை பற்றிய உங்கள் கருத்தை எழுதவும். நன்றி.






Dec 6, 2010

தமிழக தேர்தல்வெற்றி யாருக்கு ஜூ.வி.சர்வே

ஜூ.வி. நிருபர்கள் 80 பேர் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புகுந்து... புறப்பட்டு, 3,525 பேரிடம் எடுத்த சர்வே . அதில் பங்குபெற்ற வாக்காளர்கள்  சர்வே டீமிடம் வெளிப்படுத்திய மனநிலையின் தொகுப்பு இங்கே!

பொதுவாக மீடியாக்களில் அலசப்படும் டெக்னிக்கலான விவகாரங்கள் நகர்ப்புறங்களில் பேசப்படும் அளவுக்கு கிராமங்களைச் சென்றடைவது இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்கு விதிவிலக்கு! "மொத்தம்  1.76 லட்சம் கோடியாமே..? இதுக்கு எத்தனை சைபர் போடுவாங்க?" என்று கேட்டு மலைத்தார்கள். "ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று முழுசாக விளங்கிக்கொள்ள முடியாத சில வாக்காளர்கள்கூட, 'அருணாசலம்’ படத்துல ரஜினி அடுக்கி வெச்சிருக்கிற மாதிரிதான் இதையும் அடுக்கி வெச்சிருப்பாங்களா?’ என்று கேட்டார்கள்!


வயதில் முதிய கிராமத்து வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க. அளித்து வரும் 'இலவசம்' உள்ளிட்ட நலத் திட்டங்களில் பிடிப்பு இருக்கிறது. அதே சமயம்,  ஆ.ராசா மீது தி.மு.க. தலைமையே முந்திக்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்ற ஆவேசம் தெரிந்தது. "கருணாநிதி எதுக்கு இப்பிடி கண்ணை மூடிக்கிட்டு அந்த ராசாவுக்கு சப்போர்ட் பண்ணுறாரு?" என்று கோபமாகவே கேட்கிறார்கள். அதனால்தான், 'தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடித்தால், எங்கள் ஓட்டு அந்தக் கூட்டணிக்கே' என்று கூறிய பல கிராமத்து வாக்காளர்கள், "அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்?" என்ற கேள்வியில், 'ஜெயலலிதா பெயரை டிக் அடித்தார்கள்!


இன்னும் சிலருக்கு தி.மு.க-தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், "கட்சியைக் கட்டுப்பாட்டுல வெச்சுக்கிற விஷயத்தில் கலைஞரைவிட ஜெயலலிதா கரெக்ட்டா இருப்பாங்க. இப்ப நடக்குற பல விஷயங்களைப் பார்த்தா, தி.மு.க. யாரோட கட்டுப்பாட்டுல இருக்குதுன்னே புரியலை..." என்று வருத்தத்தோடு கூறியதையும் கேட்க முடிந்தது. இவர்களும்கூட, 'அடுத்த முதல்வர் ஜெயலலிதா' என்று டிக் அடித்தனர்!


"தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும், 'நாட்டாமை’ விஜயகாந்த் எடுக்கப்போகிற கூட்டணி முடிவில்தான் தீர்ப்பு ஊசலாடுகிறது. அவர் போயஸ் கார்டனில் சரண் அடைந்தால், தி.மு.க-வின் வெற்றிக்குப் பாதிப்பு வரும். 1996-2001 தி.மு.க. ஆட்சியை நல்ல ஆட்சி  என்றார்கள். 'தொடரட்டும் இந்தப் பொற்காலம்’ என்று எல்லாம் பாட்டுப் போட்டார்கள். என்னாச்சு... ஜெயலலிதா ஜெயிக்கலையா? காரணம், அந்த சமயம் ஜெயலலிதா போட்ட வலுவான கூட்டணி. அதே மாதிரி கூட்டணி இந்த முறையும் ஜெயலலிதாவுக்கு அமைந்தால், கருணாநிதி இதுவரை செய்த திட்டங்களை மக்கள் மறந்தாலும் ஆச்சர்யம் இல்லை!" என்று நுணுக்கமான அரசியல் பேசினார் கள் நகர்ப்புறத்து வாக்காளர்கள் சிலர்.பொதுமக்களின் மிக முக்கியமான பிரச்னைகள் என்று நாம் வரிசைப்படுத்தியவற்றில் விலை வாசியை பெரும்பாலானவர்கள் டிக் செய்தாலும், "மின்வெட்டு பத்தி இந்த சர்வேயில் கேட்கலியே...?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்டவர்கள் உண்டு. இருப்பினும், "மின்வெட்டைவிட விலைவாசிதான் இன்றைக்குக் குடும்பங்களின் நிம்மதியைக் குலைக்கும் முக்கியக் காரணி!" என்பதே பெரும்பாலோர் கருத்து.


"சார், வழக்கமா ஐயப்ப சீஸனில் நல்ல வியாபாரம் ஆகும். இந்தத் தடவை துணி விலை மூணு மடங்கு அதிகம். வியாபாரமே ஆகலை. நாங்க எப்படி வாழ?" என்றபோது, மதுரை  திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த துணிக்கடை  உரிமையாளர் ஒருவரின் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.
இதிலிருந்து முரண்பட்ட பார்வையாக, "முதுமையின் காரணமாக வரும் தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக கருணாநிதி நிற்பாரா? அல்லது வேறு யாரையாவது முன் நிறுத்துவார்களா?" என்று சந்தேகம் எழுப்பிய சில வாக்காளர்கள், "கருணாநிதியே முதல்வர் வேட்பாளர்னாத்தான் என் ஓட்டு. இல்லாட்டி ஜெயலலிதாவுக்குதான்!" என்று சொன்னதையும் கேட்க முடிந்தது.

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் விஜயகாந்த்துக்கு செல்வாக்கு கூடுதல்தான். "தொடர்ந்து இரண்டு எலெக்ஷனா தனியா நிற்கிறாரு. இந்தத் தடவையும் தனியா நின்னா ஏமாந்துடுவாரு..." என்று கூறிய இளைஞர்கள் பலர், "அவரு கூட்டணி போட்டா தப்பில்லை. அப்பவாச்சும் கொஞ்ச இடங்களைப் பிடிக்கலாம்!" என்று கரிசனம் காட்டினார்கள்.

"ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெரிய அளவில் கூடிவிடவில்லை. கடந்த 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருணாநிதி செய்த அரசியலில் பாதியைக்கூட ஜெயலலிதா இப்போது செய்யவில்லை. அடிக்கடி கொடநாட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்கொள்வது, போயஸ் கார்டனில் உட்கார்ந்தபடியே அரசியல் செய்வது என்று இருந்தால் எப்படிப் பலன் கிடைக்கும்?" என்று சொன்னவர்கள்,  "காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது!" என்று ஆரூடம் சொன்னார்கள்.  அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டண உயர்வுகள், அதிரடிச் சட்டங்கள் மறுபடி படையெடுக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியவர்களையும் பார்க்க முடிந்தது.


விவசாயிகள் தரப்பில் பெரும் அதிருப்தி தி.மு.க. மீது இருக்கிறது. "ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கரை வேட்டிகள் திரும்பிய பக்கமெல்லாம் நிலத்தை வளைக்கிறார்கள். விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்கப்படுகின்றன. நஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு விவசாயத்தைத் தொடர நினைப்பவர்களைக்கூட, இந்த ரியல் எஸ்டேட் கரை வேட்டிகள் தங்கள் சுழலுக்குள் இழுத்துவிடுகின்றன!" என்று சொன்னார்கள் பல விவசாயிகள்.
"விவசாய வேலை செய்தவர்கள் எல்லாம் இன்னிக்கு மில்லில் மூட்டை தூக்கிக்கிட்டு இருக்காங்க. கலர் டி.வி., காஸ் அடுப்பு கொடுக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, விளைநிலமே விரயமாகிக்கொண்டு இருக்கையில், இலவச டி.வி-யில் படம் பார்த்தால் வயிறு நிரம்பிவிடுமா?" என்று ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் விசைத்தறித் தொழில் முடங்கி இருக்கிறது. அதனால் அந்தப் பகுதிகளில் ஊர் மக்களே கஞ்சித் தொட்டி ஆரம்பிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். "அந்த அம்மா ஆட்சியில கரெக்டாக் கட்டணம் கூட்டினாங்க. ஆனா, இந்த ஆட்சியில எஸ்.எஃப்.எஸ்., எஸ்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ். அப்படின்னு புதுபுதுசா பஸ் விட்டு மறைமுகமாகப் பகல் கொள்ளை நடத்துறாங்க..." என்று திருச்செந்தூர் மக்கள் கொதித்தார்கள்.

"இலவச டி.வி. வழங்கியது சில இடங்களில் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது. "டி.வி. பொட்டி கொடுக்கிறதுக்குப் பதிலா ஆடு, கன்னு கொடுத்திருந்தா அதை வெச்சுப் பொழப்பைப் பார்க்கலாம்..." என்றும் சிலர் சொன்னார்கள்.


இதையெல்லாம் தாண்டி... வெற்றி தோல்வி பற்றி சொல்லும்போது, "கூட்டணியைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும்!" என்று பலரும் சொல்வதைப் பார்த்தால், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் கையில்தான் இரண்டு பெரிய கட்சிகளின் எதிர்காலம் அடங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது!
 நன்றி...
ஜூ.வி. டீம்.. ஜூனியர் விகடன் 05-டிசம்பர்-2010.