Mar 27, 2012

கனிமொழி புதிய மனு ரகசியம். ராசாவுக்கு தெரிந்தே நடக்கிறதா?


டில்லி ஹைகோர்ட்டில் வெள்ளிக்கிழமை  கனிமொழி எம்.பி. தாக்கல் செய்துள்ள மனு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு சிலருக்கு, “ஓஹோ.. இவர்கள் இந்த ட்ராக்கில் போகிறார்களா?” என்று விஷயத்தை புரிய வைத்திருக்கிறது. அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு, ஏற்கனவே நடந்துவரும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவே நேற்றைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்பதே கனிமொழி மனுவின் மெயின் கான்ஸெப்ட். இதை சப்போர்ட் பண்ணுவதற்காக இரு விஷயங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ன.

முதலாவது, தொலைத்தொடர்பு அமைச்சில் 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடாக நடந்திருந்தால்கூட, அதை கனிமொழியால் செய்திருக்க முடியாது. காரணம், கனிமொழி வெறும் ராஜ்யசபா எம்.பி. மட்டுமே. தொலைத்தொடர்பு அமைச்சராகவோ, அல்லது அந்தத் துறையில் முடிவு எடுக்கும் அதிகாரமுடைய உயரதிகாரியாகவோ இருக்கவில்லை.

இரண்டாவது, கலைஞர் டி.வி.க்கு இந்த விவகாரத்தில், தொடர்பு உள்ளதோ, இல்லையோ, வேறு விஷயம். அது எப்படியிருந்தாலும், கலைஞர் டிவியில் கனிமொழி பங்குதாரராக மட்டுமே இருக்கிறார். நிர்வாக முடிவுகளில் அவர் தலையிட்டது கிடையாது.

“இந்த இரு விஷயங்களையும் வைத்து, 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்” என்று முடிக்கப்பட்டுள்ளது கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, டெல்லி திகார் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்தாண்டு நவம்பரில் ஜாமீன் வழங்கப்பட்டது. சி.பி.ஐ. அவர் மீது பதிவு செய்துள்ள வழக்கு, “ஸ்பெக்ட்ரம் முறைகேடு சதித் திட்டத்தில் இவரும் ஈடுபட்டார்” என்பதுதான். சதி செய்யும் அளவுக்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிராத ஒருவரால் எப்படி சதி செய்திருக்க முடியும்? என்பதே இந்த மனு டில்லி ஹைகோர்ட்டில் எழுப்பியுள்ள கேள்வி.
கனிமொழியின் பெயர் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்று, அவர் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் இருந்த பின்னரும், இந்த ஃபிரெஷ்-ஸ்டார்ட் சாத்தியமா?

இந்த விவகாரங்களில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களை விசாரித்தபோது, “சி.பி.ஐ. மனது வைத்தால் சாத்தியம்தான்” என்கிறார்கள்.
“தற்போது சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கின் மெயின் ஃபிரேமை மாற்றாமல் விட்டாலே, அது கனிமொழிக்கு சாதகமாக அமையும்” என்கிறார்கள் அவர்கள். தற்போதுள்ள மெயின் ஃபிரேம், சதி செய்தல், அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பொருளாதாரக் குற்றம் புரிதல், அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தல் என்ற பில்லர்களில் உள்ளது.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், அரசு அதிகாரம் அல்லது, பதவி கையில் இருக்க வேண்டும். அல்லது, அதிகாரத்தை பயன்படுத்தி மற்றொருவரால் பெறப்பட்ட பணம், நேரடியாக வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.

அதை வைத்துக்கொண்டுதான், கனிமொழியின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரி. இப்படியொரு ரூட் இருந்தால், அதை முதலிலேயே செய்திருப்பார்களே? எதற்காக 6 மாதங்கள் கனிமொழியை சிறையில் வைத்திருக்க வேண்டும்? அங்குதான் உள்ளது, இந்த வழக்கில் உள்ள மற்றொரு சூட்சுமம்.
இவர்கள் இந்த ரூட்டில் போக தீர்மானித்தால், அது மற்றொரு தரப்பை பலவீனப்படுத்தும். அந்தத் தரப்பு, ஆ.ராசா!

கனிமொழியின் தற்போதைய மனு விசாரணைக்கு வரும்போது, அதில் இவர்கள் தாக்கல் செய்யப்போகும் அபிடஃபிட், மற்றும் வக்கீல்களின் வாதங்களில், “குற்றம் நடக்கவே இல்லை” என்ற வாதம் இருக்க முடியாது. “குற்றம் நடந்திருந்தாலும், அதில் இவருக்கு (கனிமொழிக்கு) தொடர்பு கிடையாது” என்ற வகையில்தான் அபிடஃபிட் தயாராகும்.

ஆ.ராசாவின் கோ-அக்யூஸ்ட் என்ற நிலையில் உள்ள கனிமொழி தரப்பால் மேற்கொள்ளப்படும் இந்த மூவ், ராசாவின் கேஸை பலவீனப்படுத்தி, அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து விடலாம்.

ராசாவின் சம்மதத்துடன்தான் கனிமொழியின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ராசா ஏன் சம்தித்தார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.

Mar 23, 2012

இந்தியாவின், சோனியாவின், காங்கிரஸின் பச்சைதுரோகம்.


எப்படி தமிழனுக்கு ஆதரவு தர சோனியாவின் காங்கிரஸ் அரசு சம்மதம் தெரிவித்தது என்று ஆச்சரிய பட்டனர் தமிழ்நாட்டு மக்கள்.  இப்போது புரிகின்றது எட்டு கோடி தமிழர்களை மடையனாக்கி விட்டது இந்த காங்கிரஸ் அரசு.

காங்கிரஸ் தனது குள்ள நரி வேலையை பார்த்து விட்டது. உலக நாடுகள் எந்த விசாரணைகள் செய்யபட்டலும் அது சிறிலங்காவின் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு வரியை அதில் இணைத்து விட்டு அமரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து விட்டது.

இதனால் எந்த சுயாதீனமான விசாரணைகளுக்கும் அங்கு இடமில்லை. ஸ்ரீலங்கா விரும்பாமல் எந்த துரும்பையும் நகர்த்த முடியாது. இதில் இந்தியா மீண்டும் ஸ்ரீலங்கா நண்பன் என்பதனை நிருபித்தும், தனது ஈழதமிழர்களின் விரோதி,எதிரி என்பதை நிருபித்துமீண்டும் தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்து விட்டது.

தமிழர்கள் இன்னும் சாகத்தான் வேண்டுமா? தமிழர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ராஜபக்ஷவுக்கு சாதகமாக்கிய  இந்தியாவின், சோனியாவின், காங்கிரஸின் பச்சைதுரோகம்.சதியே இது. வெண்ணை திரண்டு வரும் பொது சட்டியை உடைத்ததுவிட்டது காங்கிரஸின் இந்திய அரசு.





Mar 22, 2012

தட்டாமலே திறந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு.புலமைப்பித்தன்


என் கண்ணிலே கனவாகவும், நெஞ்சிலே நினைவாகவும், ஒரு கணமும் நீங்காமல் நிறைந்திருக்கும் என் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்டியிலே பிறந்தார். 

என் உள்ளத்தில் நுழைந்து  உயிரிலே கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவன்; அவன் பேரைச் சொன்னால் உலகமே அதிர்ந்து போகும் பேராண்மை மிக்கவன்  என் தம்பி பிரபாகரன் வல்வெட்டித் துறையிலே பிறந்தான். 

அந்த மாமனிதன் வடகடலில் இட்ட ஒரு நுகம்; அதன் துளையில் தென்கடல் இட்ட கழி சென்று கோத்ததுபோல தம்பி. சென்னையில் கண்டார்கள் பேரன்பும் நட்பும் கொண்டார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான நட்பும், உள்ளம் கலந்த உறவும், தனி மனிதர்களுக்கான நட்பும் உறவும் அன்று! அது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலான நட்பு; உறவு.  

அடிமைச் சகதியில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை  உலகம் முழுவதும் விடிந்தாலும் தங்களுக்கு விடிவே இல்லாமல் தவித்துக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்சிக்காக  விடுதலைக்காக உருவான நட்பு. உன்னதமான உறவு.

இரண்டு புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பொருத்தமான நட்பு. ஈழப்போராளிகள் என்று எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள். அத்தனை பேரும் என் வீடு தேடி வந்தவர்கள்தாம். எந்தப் போராளி இயக்கத் தலைவர்களையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 

தமிழ் ஈழ விடுதலையை மீட்டெடுக்கப் போகும் பெரும் தளகர்த்தர் தம்பி மட்டும்தான் என்பதிலே அழுத்தமான  உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். தட்டுங்கள்   திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்என்கிறார்களே... அதற்கு  ஒருபடி மேலே போய்த் தம்பிக்காக, தட்டாமலே திறந்த கதவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக் கதவு. கேட்காமலேயே கொடுத்த கரம், அந்த வள்ளலின் வாரி வாரிக் கொடுத்துப் பழக்கப்பட்டுப்போன கரம். 

சுதந்தரம் என்பது யாரிடம் இருந்தும் யாரும் வாங்குவது அல்ல; ரத்தத்தின் விலையாக மீட்டெடுப்பது. கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்ற சுதந்தரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. விலைகொடுத்து வாங்காத எதுவும் மரியாதைக்குரிய பொருள் அல்ல. சுதந்தரம் ஒன்றும் இலவச வேட்டி சேலை போல யாரோ கொடுக்க யாரோ வாங்கிக் கொள்வதல்ல. 

நான் தம்பிக்கு அடுத்தபடியாக மதிக்கின்ற  மரியாதை வைத்திருக்கிற போராளி சேகுவேராதான். அவர் கியூபாவை விட்டு வெளியேறும்போது தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்; சுதந்தரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி; ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் நடக்கிறேன். சிலர் என்னை சாகசக்காரர் என்று அழைக்கலாம்! நான் சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம்! தன்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரர் என்கிறார் போராளி சேகுவேரா.

 தம்பியும், தன் மண்ணையும் மக்களையும் மீட்க, தன்னையே அர்ப்பணம் செய்துகொள்ளத் தயங்காத சாகசக்காரன்தான். அந்த மாவீரனின் சாகசத்தில் மக்கள் திலகம் மாறாத நம்பிக்கை வைத்திருந்தார். நான் உனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன். ஆயுதங்கள் வாங்கிக் குவி. விடுதலைப் போரில் நின்று வெற்றிகளைக் குவி. உன்னால் மட்டும்தான் தமிழீழம் விடுதலை பெறும். தட்டிக் கொடுத்தார் தாவி அணைத்துக் கொண்டார். கோடானுகோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தார். 

ஒருநாள் தம்பியிடம், ‘‘ஆயுதப்-புரட்சியின் மூலம் ஈழ விடுதலையை மீட்டெடுக்க எவ்வளவு தேவைப்படும்?’ என்றார் புரட்சித் தலைவர். தம்பி, ‘நூறு கோடிஎன்றார். அதை நான்  தருகிறேன்என்றார் புரட்சித் தலைவர்.

என் தலைவன் கொட்டிக் கொடுத்த செல்வம், அடிமைச் சிறையில் கிடக்கும் ஒரு தேசத்தை மீட்க ஆயுதங்களாகிப் பயன்பட்டது. என் தலைவனுக்கு நிகரான மாமனிதன் இல்லை
நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

Mar 7, 2012

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்.கண்ணதாசன் கூறும் உண்மைகள்


திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்என்று கேட்டார்.

சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமேஎன்று.

என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் சோஅவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

என்ன?”  என்றார்.  “தெரியாதுஎன்றேன்.

எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்என்றார்.

இருக்காதேஎன்றேன்.

இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்ததுஎன்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யாஎன்றேன்.

என்ன நினைக்கிறாய்?” என்றார்.

கொஞ்சம் கலகம் இருக்குமேஎன்றேன்.

பார்த்துக் கொள்ளலாம்என்றார் அவர். என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் பென்ஷன்கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமேஎன்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லைஎன்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவேவனவாசத்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லைஎன்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவிஇந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

Mar 2, 2012

சோனியா காந்தியின் தீடீர் மனமாற்றம் ஏன்.

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் பிரசாரங்களில், சோனியா தீவிரமாக ஈடுபட்டாலும், அரசியலில் இருந்து மெதுவாக அவர் ஒதுங்குகிறாரோ என்ற சந்தேகம், டில்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 ராஜிவ் காந்தி பவுண்டேஷன், இந்திரா காந்தி டிரஸ்ட், தீன்மூர்த்திபவன் மெமோரியல் என பல அமைப்புகள், சோனியா குடும்பத்தினர் வசம் உள்ளது.

இந்த அமைப்புகளில் பிரியங்கா உறுப்பினராக உள்ளார். கோடிக்கணக்கான பணம் புரளும் இந்த அமைப்புகள், பிரியங்காவின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம்.

அதே சமயம் மகன் ராகுல், மேலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு பலவித பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் சோனியா காந்தி.

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சோனியா விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.