Nov 7, 2011

கூடங்குளம் அணு மின் நிலையம் வரப்பிரசாதம்: அப்துல் கலாம்.

கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது, இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள வரப் பிரசாதம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கூடங்குளத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் அணு மின் கழக அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் அணு மின்நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் 15 கிராம மக்களை அப்துல்கலாம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அப்போது கலாம் கூறியதாவது:

கூடங்குளம் அணு மின் நிலையத்தை நான் சுற்றிப் பார்த்தேன். அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதன் பின்னர் இது மிகச் சிறந்த அணு மின் நிலையம் என்பதை நான் உணர்ந்தேன். இந்த அணு மின் நிலையம் சிறப்பானது, 

முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது. இந்த அணு மின் நிலையத்தால் எந்தவித ஆபத்தும் இல்லை. கதிர்வீச்சுகள் வெளிப்படாத வகையில் இந்த உலை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அணு உலை குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஆயிரம் ஆண்டு பழமையான நெல்லையப்பர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதேபோல் இந்த அணுமின்நிலையமும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதில்லை

கூடங்குளம் பூகம்ப பாதிப்பு பகுதி இரண்டின் கீழ் வருகிறது. எனவே இங்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால்தான் இங்கு அணுமின்நிலையம் கட்டப்பட்டது. அணு உலையானது 13.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியினால் அணு உலைகள் பாதிக்க வாய்ப்பில்லை.

யாருடைய வற்புறுத்தலினாலும் இங்கு நான் வரவில்லை. நான் சமாதானத் தூதுவராகவும் வரவில்லை. அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் நான் சந்தேகிக்கவில்லை.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். நம்மிடம் தற்போதுள்ள பாரம்பரிய மின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலுமே மின் பற்றாக்குறை நிலவுகிறது. 

நாட்டின் சீரிய, சிறந்த வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். அதற்கு அணு மின் சக்தி மிகவும் தேவை. ஒரு விஞ்ஞானியாக, தொழில்நுட்பவாதியாக அணு சக்தியை நான் ஆதரிக்கிறேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

1 comment:

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html