Dec 27, 2011

விக்கிரமாதித்தா! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! 

கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்!

பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? 

நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!
நன்றி : தினமணி

No comments: