Jun 9, 2011

தயாநிதி மாறனை கைவிட்ட கருணாநிதி.

2ஜி அலைகற்றை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வலையில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை திமுக தலைமை கைவிட்டு விட்டது. ‘தயாநிதி மாறனே சி.பி.ஐ. வழக்கை எதிர் கொள்வார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுகவில் அதிக செல்வாக்கு உடையவர் யார் என்று தினகரன் நாளிதழில் கடந்த 2007ல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு என்றும், அழகிரிக்கு மிகமிக குறைந்த அளவே  செல்வாக்கு உள்ளது என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து மாறன் சகோதரர்களுக்கும், திமுக தலைவர் கருணாநிதி இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. இதற்கிடையே மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியான சம்பவமும் நடந்தது.  கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி, மாறன் சகோதரர்களை கடுமையாக எதிர்க்க தொடங்கினார். இதன் விளைவாக தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் பதவி, தற்போது திகார் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது மாறன் சகோதரர்களும், ‘கருணாநிதி அண்ட் கோ’வும் ராசியாயினர். மாறன் சகோதரர்களை உச்சி முகந்த கருணாநிதி, ‘‘கண்கள் பனித்தன; இதயம் இனித்தது’’ என்று கவிதை நயம் சொட்ட சொட்ட வரவேற்றார். மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற தயாநிதி மாறன், ஜவுளித்துறை அமைச்சராகவும் ஆனார்.

எனினும் டெல்லியில் அவருக்கு முன்பு இருந்த முக்கியத்துவம் இல்லை. முதல் முறை எம்.பி.யாகி, தொலைத் தொடர்பு அமைச்சராகவும் இருந்தபோது, டெல்லியில் திமுக – காங்கிரஸ் இடையே உறவுப்பாலமாக தயாநிதி செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது முறை எம்.பி.யாகி ஜவுளித்துறை அமைச்சராக தற்போது இருக்கும் தயாநிதி மாறனை, டெல்லி காங்கிரஸ் தலைமையுடனான பேச்சுவார்த்தைகளில் திமுக தலைமை சேர்த்துக் கொள்வதில்லை. ஒதுக்கியே வைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவே திமுக சார்பில் காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக தோண்டப்பட்ட 2ஜி குழியில் தயாநிதி மாறனே சிக்கி கொள்ளும் சூழல் ஏற்பட்டது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதற்கு தயாநிதி மாறன் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2ஜி விவாகாரம் தொடர்பாக தயாநிதி மாறனிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உள்ளது. மேலும், சி.பி.ஐ.யும் தயாநிதியிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாநிதி மாறனை பதவி விலக சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதி  அளித்த பேட்டி:

கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?
பதில்:- அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி:- தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?
பதில்:- தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் அவர் தயாநிதி மாறனை கைவிட்டு விட்டார் என்றே தெரிகிறது. மேலும், தில்லி திகார் சிறையில், ராசா, கனிமொழி, சரத்குமார் இருப்பதற்கு காரணமே மாறன் சகோதரர்கள்தான் என்ற எண்ணத்தில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வேற என்ன செய்வார்..

ஜோதிஜி said...

எளிமையான சிந்தனைகளைப் போலவே உங்கள் வலைதளமும் எளிதாக உள்ளே வரமுடிகின்றது. தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்.

arasan said...

உப்பு தின்றவன் தண்ணி குடிச்சே தீரனும் ,,,,

rmanikkam said...

துரை சொன்னதுதப்பு செய்தவன் வருந்தி ஆகனும்

rmanikkam said...

தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்